• +91 - 9952351588
  • kalviguru2013@gmail.com
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Home
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Quotes
Flash News:
Squard Form

புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி

  • 2015-11-03

 

நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன பிரம்மாண்டமான ஏரி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஏரியில் தற்போது கடல்போல ததும்பி நிற்கிறது தண்ணீர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன. அரை நூற்றாண்டு கழித்து அங்கே வசந்தம் பிறந்திருக்கிறது. சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில்தான். வாருங்கள், சாதனைக் கதையை திரும்பிப் பார்ப்போம்!

2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்துகிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது. பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன. ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.

ககன் தீப் சிங் பேடி கண்ட கனவு

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார். அவர் சொன்னது இதுதான்: “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது. சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான ஏரி அது.

அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் கொண்ட கதவணை இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது.”

வாலாஜாவின் நீராதாரம் பரவனாறு, காவிரி

கடலூர் மாவட்டத்தில் ஓடும் பரவனாறுதான் அங்கிருக்கும் ஏரிகளுக்கெல்லாம் நீர் ஆதாரம். கம்மாபுரம் ஏரி, கொம்பாடிகுப்பம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஒவ்வொன்றாக நிரப்பிவிட்டே பரவனாறு கடலுக்கு செல்கிறது. வாலாஜா ஏரிக்கு பரவனாற்றின் தண்ணீர் மட்டுமின்றி, கூடுதலாக வெள்ளாறு - ராஜன் வாய்க்கால் மூலம் மேட்டூர் - கல்லணை வழியாக காவிரியின் தண்ணீரும் கிடைத்துக்கொண்டிருந்தது. இதிலிருந்தே தமிழகத்தின் ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும் இருந்த அல்லது அறுந்துபோன தொடர்புகளை புரிந்து கொள்ளலாம்.

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது. இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி அழிந்தேபோனது. எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் ககன்தீப் சிங் பேடி.

சமூக பொறுப்புணர்வுத் திட்டம்

அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம் பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிட வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது. ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.

பத்தாண்டு பொறுமை

வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை. எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன் தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது. ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.

இன்னொரு பக்கம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம். விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். மிகப் பெரிய திட்டம் என்பதால் ஏரியின் நான்கில் ஒரு பகுதியை மீட்க வேண்டும் என்றாலும்கூட குறைந்தது ரூ.10 கோடி தேவை. ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி. நிர்வாகம்.

பணி தொடங்கியது

ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.

“மிகப் பெரிய ராட்சத இயந்திரங்களா லேயே அந்த புதர்க் காட்டுக்குள்ள நுழைய முடியலை. தவிர, அந்த இடம் சதுப்பு நிலமாக இருந்ததால் வண்டிச் சக்கரங்கள் மண்ணுக்குள் புதைந்து விடும். பல சமயம் பாம்புகள் வண்டிக்குள்ளேயே ஏறிடும். புதர்களை வெட்டி போட்டுட்டே வந்தப்ப ஒரு இடத்துல துருப்பிடிச்சுப்போன நிலையில 15 கதவுகள் கொண்ட மிகப் பெரிய ஷட்டர் கிடந்தது. அங்கே ‘1851’ன்னு பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இருந்தது. ஏரியை உருவாக்கின ஆண்டு அது.

வேலை தொடங்கிய 10-வது நாளிலேயே பெரிய மழை. ஏற்கெனவே சதுப்பு நிலத்துல மண்ணைத் தோண்டி குவிச்சிருந்ததால அதுவும் சரிஞ்சு பெரிய புதைகுழிபோல ஆகிடுச்சு. கொஞ்சம் தவறினாலும் வண்டிகள் பூமிக்குள்ள புதைஞ்சுடும். வேலை மொத்தமா நின்னுப்போச்சு. ஆழம் தெரியாம காலை விட்டுட்டோமாங்கிற சந்தேகம் வந்துடுச்சு.

புதுசா ஒரு திட்டம் போட்ேடாம். ஏரியை இரண்டா பிரிச்சோம். ஏரியோட ஒரு பக்கம் ஓரளவு காய்ந்த நிலமா இருந்தது. இன்னொரு பக்கத்துக்கு சுரங்கத்துல இருந்த வெளியேத்துற தண்ணீர் வந்தபடி இருந்தது. ரெண்டுக்கும் நடுவுல மிகப் பெரிய மண் சுவரை எழுப்பினோம். முதலில் காய்ந்த நிலத்துல தூர் வாரத் தொடங்கினோம். சதுப்பு நிலப் பகுதியில் சில நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேத்துல இருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி அதை பெருமாள் ஏரிக்கு அனுப்பினோம். காய்ந்த நிலத்தை வெட்டி முடிக்கிறதுக்குள்ள சதுப்பு நிலம் முழுமையாக காய்ஞ்சிடுச்சு. அதையும் வெட்டி முடிச்சோம்.

விவசாயிகளின் தியாகம்

அடுத்து கால்வாய்கள் தூர் வாரும் பணி. மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்று கிற நிலத்தடி தண்ணீ ரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது. 12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷ மாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. சுமார் 15 கிராமங்கள். எல்லோ ரும் வறட்சியால பாதிக்கப்பட்டிருக்கிற சிறு விவசாயிகள். ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித் துப்பாடு என்னாகு மோன்னு கலக்கமாக இருந்தது. ஒருநாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.

ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, “ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம்கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு. எங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.

கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினீயருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை. ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம். பழைய ஷட்டரை பெயர்த்து எடுத்துட்டு புதுசா 15 கதவுகளைக் கொண்ட ஷட்டரை பொருத்தினோம்.

இறுதியாக கரைகளை எழுப்புற வேலை. ஏரியில வாருன மண்ணைக் கொண்டே நான்கு கிலோ மீட்டர் நீளத்துக்கு மிகப் பெரிய கரையை எழுப்பினோம். கரை சரிவுல வனத்துறையினர் 40,000 தேக்கு மரக் கன்றுகளை நட்டாங்க. ஏரியின் ஒரு பக்கம் ஒன்றரை மீட்டர் ஆழம் தொடங்கி மறுபக்கம் அரை மீட்டர் வரை 23 லட்சம் கனமீட்டர் (400 ஏக்கர்) தோண்டி முடிச்சோம். இதன் மூலம் ஏரியின் மொத்த ஆழம் 5 மீட்டர் ஆனது. இதில் 4.5 மீட்டர் வரைக்கும் 22 லட்சம் கனமீட்டர் தண்ணீர் தேக்கலாம்” என்றார் பூரிப்புடன்.

‘எனது ஆயுளுக்குள் பார்த்துவிட்டேன்’

இதுகுறித்து வாலாஜா ஏரி விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் எஸ்.ராமானுஜம் கூறும்போது, “எனது இளம் வயதில் அந்த ஏரியில் குதித்து நீந்தியிருக்கிறேன். அதன் பின்பு பொட்டல் காடாக அந்த இடம் மண் மூடிவிட்டது. எனது ஆயுளுக்குள் அந்த ஏரியை மீண்டும் பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2015 ஜூலை - டிசம்பர் பட்டத்தில் 12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக் கின்றன. சம்பா சாகுபடிக்குப் பின் குறுவை நடப்படாத பகுதியிலும் பிப்ரவரி - ஜூன் பட்டத்தில் 2-ம் போகமும் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

ஏரியை வெட்டியது யார்?

வாலாஜா ஏரியை வெட்டியது யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. 17-ம் நூற்றாண்டில் ஒடிசா முதல் தமிழகத்தின் தென்பகுதி வரை முகமது அலிகான் வாலாஜா நவாப் ஆட்சி செய்தார்.

இவர் விருப்பத்தின் பெயரில்தான் ஆங்கிலேயர்கள் சென்னையில் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். அதன் பிறகு 1825 - 1855 வரை 13-வது நவாபாக ஆட்சிக்கு வந்தவர் குலாம் முகம்மது கவுஸ்கான். இவர் வாரிசு இன்றி இறந்ததால் ஆட்சி ஆங்கிலேயர் வசம் சென்றது. அதேசமயம் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு 1780-ல் கடலூர் நகரம், ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இஸ்லாமாபாத் என்று அழைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின்பு 1783-ல் நடந்த கடலூர் போரில் ஆங்கிலேயர்கள் இந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால், ஏரியை ஆங்கிலேயர் வெட்டியிருக்கலாம்; ஆனால், வாலாஜா மன்னர் மீதிருந்த அபிமானம் காரணமாக மக்கள் இந்த ஏரியை ‘வாலாஜா ஏரி’ என்று அழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எல்லா பெருமையும் விவசாயிகளுக்கே..

திட்டத்துக்கு வித்திட்ட ககன் தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும் என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும். எனக்கு தெரிந்து இப்படி ஏரி நம் நாட்டிலேயே வேறு எங்கேயும் மீட்கப்பட்டது இல்லை. இப்படி ஒரு ஏரி இருந்தது என்பதை முதன்முதலில் விவசாயிகள் சிலர் என் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். கடலூர் மாவட்டம் அப்போது கடும் வறட்சியில் இருந்தது. அதேசமயம் ஏரி மண் மூடிக்கிடந்ததால் மழைக்காலத்தில் அங்கு வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது.

இதனால், எப்படியாவது இந்த ஏரியை மீட்க வேண்டும் என்று நினைத்தோம். என்.எல்.சி. நிறுவனத்தை சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் அதை செய்ய வைத்தோம். மீதமுள்ள ஏரியையும் அந்த நிறுவனம் மூலம் மீட்க முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும்” என்றார்.

Articles

வகுப்பறையில் மாணவர்கள் இயல்பாக பேசட்டும், பேச்சில்தான் சுகம்!
Jan, 10, 2025
இந்தியாவில் அதிகம் புரிந்து கொள்ளப்படாத மாமேதை - மன்மோகன் சிங்!
Jan, 02, 2025
மன அழுத்தத்தை குறைக்கும் மெல்லிசை பாடல்கள்!
Dec, 16, 2024
நிகழ் காலம் சரியாக இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
Nov, 28, 2024
பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?
Mar, 21, 2024

Important Websites

TN GOVT DA TABLE மருந்தில்லா மருத்துவம் காமராசரின் அரிய புகைப்படங்கள் TEACHERS RECRUITMENT BOARD TNPSC EMPLOYMENT EXCHANGE CPS WEBSITE CPS Account Slip EMIS GPF Account Slip Website Three Types of Certificates Laptop Online Entry Digital locker BANK IFSC & MICR CODE PAY EB BILL ONLINE SCHOLARSHIP Central Education Loan Site OnLine APPLY NEW RATION CARD DATA CENTRE INCOMETAX e-FILING Online Complained to Police Station DGE Site BIN VIEW NEW TEXT BOOK TNSCHOOLS TNSCERT IFHRMS EPAY ROLL INSPIRE AWARD CHITTA PATTA VIEW TNTP DGE NEW KalviGuru's Blog Gurukulam DoTE Prof.Tax Online PPO Intimation

Quick Links

Student Zone Teacher Zone Govt. Orders Forms District News Articles Technology Quotes Motivational Videos Biography Online Test Mutual Transfer Study Material About Us Contact Us
WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Condition
Copyright © 2025. All rights reserved by Kalviguru.com. Designed by: Tycoon Pacific