தொடக்கமும் முடிவுமில்லாதவர் (infinity) கடவுள் !!

ஒரு பகுத்தறிவுவாதிக்கும் ஆன்மீகவாதிக்கும் நடந்த சுவையான உரையாடல்:
பகுத்தறிவுவாதி: கடவுள் யார்...? சரியான விளக்கத்தைக் கொடுங்கள். கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன்.
ஆன்மீகவாதி: “ஆதியுமில்லா அந்தமுமில்லா அருட்பெருஞ்ஜோதி தான் கடவுள் “
பகுத்தறிவுவாதி: இதுதான் பிரச்னை. அதெப்படி? துவக்கமுமில்லாத முடிவுமில்லாத என்ற ஒன்று எப்படி இருக்க முடியும். திட்டமிட்டு உறுதியாக இவர்தான் கடவுள் என்றுகூடச் சொல்லமுடியவில்லை. ஆனால் அறிவியல் திட்டவட்டமாக ஒவ்வொரு விஷயத்தையும் வரையறுத்துச் சொல்கிறது. அதனால்தான் அறிவியலை நம்புகிறேன். உங்கள் விளக்கங்கள் கடவுளை நம்பத் தகுந்ததாக இல்லை. கடவுள் பற்றிய அடிப்படைக் கேள்வியிலேயே உங்களால் கடவுள் பற்றி திட்டவட்டமாக சொல்லமுடியவில்லை. அதெப்படி தொடக்கமும் முடிவுமில்லா ஒன்று இருக்க முடியும். அறிவியலைப் பாருங்கள். கதிரவனுக்கும் பூமிக்குமான தொலைவைத் துல்லியமாக சொல்கிறது. கதிரவன் பூமியை வந்தடையும் நேரத்தைத் துல்லியமாகச் சொல்கிறது. உறுதியாக வரையறுத்துச் சொல்ல முடியாத ஒரு விளக்கத்தையல்லவா நீங்கள் தருகிறீர்கள்.
ஆன்மீகவாதி : அப்படியா நல்லது. அறிவியலுக்கான அடிப்படை என்ன?
பகுத்தறிவுவாதி: கணிதம்.
ஆன்மீகவாதி: கணிதத்திற்கான அடிப்படை என்ன?
பகுத்தறிவுவாதி : எண்கள்
ஆன்மீகவாதி : நல்லது. ஒரேயொரு கேள்விக்கான பதிலை மட்டும் சொல்லுங்கள் போதும். பெரிய எண் எது என்று சொல்லுங்கள்.
பகுத்தறிவுவாதி : (திகைக்கிறார்).
[ஆன்மீகவாதியோ அவர் எந்த எண்ணைச் சொன்னாலும் கூடுதலாக ஒன்றைப் போட்டு சொல்கிறார். பகுத்தறிவுவாதியால் பெரிய எண்ணைச் சொல்லமுடியவில்லை.]
ஆன்மீகவாதி: விடுங்கள் . சிறிய எண்ணையாவது திட்டமிட்டு, வரையறுத்து சொல்லுங்கள்.
பகுத்தறிவுவாதி: மீண்டும் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இறுதியாக வரையறுத்துச் சொல்வதாக நினைத்துக் கொண்டு ” ∞ ” என்று சொல்கிறார்.
ஆன்மீகவாதி: அது குறியீடுதானேயப்பா. அது எண் இல்லையே
infinity க்குக் கொடுத்த குறியீட்டை எப்படி எண் என்று சொல்ல முடியும். infinity யை தமிழில் எப்படி சொல்வீர்கள் என்கிறார்.
பகுத்தறிவுவாதி : முடிவிலி என்போம்.
ஆன்மீகவாதி : பெரிய எண்ணுக்கும் சின்ன எண்ணுக்கும் முடிவிலிதானே குறியீடு.
பகுத்தறிவுவாதி: ஆமாம்.
ஆன்மீகவாதி: அறிவியல் திட்டவட்டமாக, வரையறுத்து சொல்கிறது என்றாயே. எண்களின் மிகப்பெரிய எண்ணையோ சிறிய எண்ணையோ ஏன் சொல்ல முடியவில்லை? அடிப்படையிலேயே வரையறுத்து இந்த எண் தான் இறுதி எண் என்று ஏன் சொல்லமுடியவில்லை.. நான், ஆதியுமில்லா அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதி என்று சொல்வது சரிதானே..
பகுத்தறிவுவாதி என்ன பதில் சொல்வது என்றுதெரியாமல் திகைக்கிறார்.